தமிழக செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்திய கணவன்... தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற பெண்

கணவனின் கொடுமையை தாங்க முடியாத பெண் ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்தார்.

சேலம்,

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் தங்கம் (40 வயது). இவரது மனைவி பத்மா (40 வயது). 17 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் பத்மா கணவரின் உறவினர் ஒருவரை அடிக்கடி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனைவியின் நடத்தை மீது தங்கத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அடிக்கடி வீட்டுக்கு மதுகுடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கம் வீட்டுக்கு மது போதையில் வந்தார். அப்போது அவர் மனைவியிடம், ஏன் எனது உறவினரிடம் அடிக்கடி பேசுகிறாய்? என்று கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த தங்கம் மனைவியை அடித்தார்.

இதையடுத்து அவர் வீட்டிலேயே படுத்து தூங்கினார். குழந்தைகளும் தூங்கிவிட்டனர். கணவரின் கொடுமை தாங்க முடியாமல் மிகுந்த மனவேதனையில் இருந்த பத்மா, ஆத்திரத்தில் அங்கு கிடந்த அம்மிக்கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த கணவரின் தலையில் ஓங்கி போட்டார். இதில் படுகாயம் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Also read:4 நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் - டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பத்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.