தமிழக செய்திகள்

விஜய்யையும் தவெகவையும் நான் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை: அண்ணாமலை

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று அண்ணாமலை கூறினார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“விஜய்யையும் தவெகவினரையும் நான் இன்னும் அடிக்க ஆரம்பிக்கவில்லை. ஏனென்றால், தமிழ்நாடு அரசியலில் என்னுடைய பேச்சை மாற்றிப் பேசும் ஆள் நான் இல்லை. விஜய் பற்றி முதல் நாள் சொன்ன கருத்தைத்தான் இன்றும் சொல்கிறேன். அரசியலுக்கு புதியவர்கள் வரவேண்டும். எங்களோடு கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக நான் மாற்றி எல்லாம் பேச மாட்டேன். அவருடைய பாதையில் அவர் போகட்டும்.

அதே நேரத்தில் ‘இந்த டப்பா என்ஜின்’ என்பதற்கு பதிலடியை நான் கொடுத்துவிட்டேன். அதே நேரத்தில் தவெகவோ, விஜய்யோ கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்து வம்பு இழுத்தார் என்றால், என்னுடைய பதிலும் கடுமையாக இருக்கும். அதே அளவுக்கு நானும் போவேன்.

நாகரீகமான அரசியல் என்று விஜய் சொன்னதால் என்னுடைய பதிலும் நாகரீகமாக உள்ளது. இரண்டாம் கட்ட தலைவர்கள், நான்கு கட்சி மாறி வந்தவர்களை வைத்துக்கொண்டு தரம் தாழ்ந்து விமர்சித்தால், அதே பாணியில் அதைவிட சிறப்பாக எனக்கு பதில் சொல்லத் தெரியும். ஆனால் அது வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். அரசியல் களம் நாகரீகமாக இருக்கட்டும். அவருடைய பாதையில் அவர் போகட்டும்.

ஏற்கனவே நான் சொன்னது போல, தமிழக வாக்காளர்கள் ஏப்ரல் மாதத்தில் வரும் தேர்தலில் அவர்களுடைய எண்ணத்தில் இருப்பதை பிரதிபலிப்பார்கள். அதுவரை காத்திருப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். தவெகவினர் இதை ஒரு எச்சரிக்கையாக கூட எடுத்துக்கொள்ளட்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.