சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன்கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. போலீசார், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கொரோனா பரவல் காலகட்டத்தில் இன்றியமையாத பணிகளைச் செய்து வருகின்றனர். ஆனால் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து பணியாற்றிவரும் போலீசாருக்கு எவ்வித ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை.
தமிழக அரசு ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களில் கொரோனா வார்டுகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம், பயிற்சி டாக்டர்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. எனவே கொரோனா பணிகளில் ஈடுபடும் அனைத்து போலீசார், தூய்மைப் பணியாளர்களின் பணியில் உள்ள ஆபத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும்.
நாளிதழ், தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.