அவர் தனது பேட்டியில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து முதல்வர் ஸ்டாலின், மக்களின் நலனை முன்னிறுத்தியே செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் தவறான நடவடிக்கைகளால் மாநில அரசு கடனில் இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அம்மா உணவகம் இருந்து வரும் சூழ்நிலையில் 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படுவது குறித்து பேசுகையில், கடந்த ஆட்சியை போல காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லை என்றும், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதாகவும், அ.தி.மு.க. ஆட்சியில் அந்த திட்டத்திற்கு நிதியே ஒதுக்கியது இல்லை என்றும், அந்தந்த பகுதி நகராட்சி நிர்வாகங்கள் தான் அதை நடத்தி வந்ததாகவும், விவரம் தெரியாமல் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டுவதாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் பா.ஜ.க.வுடன் தி.மு.க. நெருங்குகிறதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், மக்கள் நலனை முன் வைத்து மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், பா.ஜ.க.வின் எல்லா திட்டங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே என்றும், எதிர்க்கட்சிகள் என்றால் ஏதாவது சொல்லி கொண்டேதான் இருப்பார்கள் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் தமிழக ஆட்சி குறித்து பா.ஜ.க.வின் விமர்சனம்? பா.ஜ.க. தலைவர்கள் மீது மென்மையான போக்கு? இஸ்லாமியர்கள் வாக்குகளை இழக்கிறதா? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கை? உள்ளிட்ட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு அமைச்சர் காந்தி பதில் அளித்துள்ளார்.