கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த சவாலான சூழலில் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இரவு பகலாக தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்க ஈஷா முடிவு செய்தது.அதன்படி, சென்னை ஓமந்துரார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 400 டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு இரவு உணவு, ஸ்டான்லி ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கும் சேர்த்து 6,900 சிற்றுண்டி பாக்கெட்கள், அதேபோல், கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனைக்கு 20 ஆயிரத்து 520 சிற்றுண்டி பாக்கெட்களும் வழங்கப்பட்டன. மேலும், திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்கப்பட்டன.
தர்மபுரி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இன்னும் ஓரிரு தினங்களில் வழங்கப்பட உள்ளது. முன்னதாக, புதுச்சேரியில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கான சிற்றுண்டி பாக்கெட்கள் துணை நிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நேரில் வழங்கப்பட்டது. இது தவிர, கோவையில் 43 கிராமங்களை தத்தெடுத்து கொரோனா நிவாரணப் பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.