சென்னை,
சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடப் பணிகள் முடிவடைந்தநிலையில், பொதுமக்கள் பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் அதனை தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க-வை வழிநடத்தியவர் ஜெயலலிதா. எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் ஜெயலலிதா. பெண்கள் பாதுகாப்புக்கு பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. மக்களிடத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் ஜெயலலிதா. முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்.
இந்தியாவிலே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதலமைச்சர் ஜெயலலிதா. சமூகநீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா. அவருக்கு நினைவிடம் கட்டக்கூடாது என்று வழக்கு தொடுத்தவர் மு.க.ஸ்டாலின். தந்தை கருணாநிதிக்கு நினைவிடம் கட்டுவதற்காக அந்த வழக்குகளை வாபஸ் பெற்றவர் மு.க.ஸ்டாலின். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களிலும் வெற்றிபெற்று, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். அதிமுகவின் வெற்றியை ஜெயலலிதாவுக்கு சமர்ப்பணம் செய்வோம். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே பெண்களின் மனநிலை என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். அந்த நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத்தான் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்திற்கு வரும் போது அனைவருக்கும் வீரம் பிறக்கும். மக்களால் நான் மக்களுக்கான நான் என்ற குரல் இங்கே கேட்டுக்கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.