கள்ளக்குறிச்சி,
கோவையை சேர்ந்தவர் சுபஷனா (28 வயது). சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் வெங்கடேசன். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சுபஷனா தனது சொந்த ஊருக்கு பணிமாறுதல் வாங்கிய நிலையில், சென்னையில் வசித்து வந்த வீட்டை காலி செய்துவிட்டு கோவைக்கு காரில் தனது குடும்பத்தினருடன் சென்றார்.
காரை சுபஷனா ஓட்டினார். காரில் அவரது மாமியார் உஷா (72 வயது), கணவர், குழந்தைகள் மற்றும் அவர்களது உறவினர் சிவக்குமார் (55 வயது) ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் கார் இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுபஷனா மற்றும் அவரது மாமியார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விபத்தில் உயிரிழந்த சுபஷனா, உஷா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து கீழ்க்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.