தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி போராட்டம் : திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம் - சீமான் குற்றச்சாட்டு..!

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிக்கெதிரான போராட்டத்திற்குத் திமுக அரசின் அலட்சியப்போக்கே முழுக் காரணம் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி போராட்டத்திற்குத் திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவியின் மர்ம மரணமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளும் மிகுந்த வேதனையளிக்கிறது. குற்றவாளிகளைக் கைது செய்வதில் அலட்சியமாக இருந்த திமுக அரசு, நீதிவேண்டி போராடியவர்கள்தான் கலவரத்திற்குக் காரணமென்று மக்கள் மீது பழிபோட முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி அதிகாலை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீமதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்து ஐந்து நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது காலங்கடத்திய திமுக அரசின் அலட்சியப்போக்கே இத்தனை வன்முறைகளுக்கும் முக்கியக் காரணமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியாவது நீதி விசாரணையைத் தீவிரப்படுத்தி, மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்குக் காரணமானவர்களுக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT