சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை தரமணி தந்தை பெரியார்நகர் பகுதியை நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தரமணியில் இருந்து வேளச்சேரி சாஸ்திரிநகருக்குச் செல்லும் வழியில் வேளச்சேரி ஏரியையும் அவர் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, சாஸ்திரிநகர், அம்பேத்கர்நகர், மேற்கு மாம்பலத்தில் மழைநீர் தேங்கிய இடங்களை கமல்ஹாசன் பார்வையிட்டார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை, ரொட்டி உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை அவர் வழங்கினார்.
தியாகராயநகரில் உள்ள மேட்லி சுரங்கபாதையை பார்வையிட்டபோது, மழைநீருடன் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதையடுத்து, மழைநீருடன் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறும்போது, மழை நிவாரண நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. மழைக்காலங்களில் மட்டுமே வடிகால் கட்டமைப்புகளை பற்றி பேசிவிட்டு பிறகு மறந்துவிடாமல் அதற்கு தீர்வு ஏற்படுத்தவேண்டும் என்றார்.