கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் உள்ள மாயம்மா கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கோவில் பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.
கன்னியாகுமரியில் கலங்கரை விளக்கம் அருகில் மாயம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடசேரியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் பூஜை செய்ய வந்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் மரப்பெட்டியில் வைத்திருந்த வெள்ளி பூஜை பொருட்கள், வெள்ளி கவசம், வெள்ளி நாணயம், வெள்ளி கவசம் பொருத்திய வலம்புரி சங்கு, கொலுசுகள் என மொத்தம் 14 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. யாரோ மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து முத்துக்கிருஷ்ணன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.