கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (78 வயது). நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஓமனா (74 வயது). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் இல்லற வாழ்க்கையில் இன்ப, துன்பங்களை இருவர் மட்டுமே பகிர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் ஓமனா திடீரென இறந்தார். மனைவியின் இறப்பை தாங்க முடியாமல் கருணாகரன் துடிதுடித்து போனார். வேதனையில் இருந்து மீள முடியாமல் இருந்த கருணாகரனுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்று விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து இருவருடைய உடல்களுக்கும் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.