மதுரை,
தென்காசியைச் சேர்ந்த முருகன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், "எனக்கு மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். சமீபத்தில் என் மனைவி குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானார். அவர்களை கண்டுபிடிக்கக்கோரி ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் கண்டுபிடிக்கவில்லை. மூவரும் தனி நபர் கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், தனபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் மனைவி அவரது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார் என தெரிவித்தார். விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரரின் மனைவி அவரது ஆண் நண்பருடன் சென்றுள்ளார். இதனால் ஆட்கொணர்வு மனுவில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மனுதாரர் விரும்பினால் கீழ் கோர்ட்டில் பரிகாரம் பெறலாம். இருப்பினும் மனுதாரரின் மனைவி அழைத்துச்சென்ற 2 குழந்தைகளின் மீது இந்த கோர்ட்டு அக்கறை கொள்கிறது.
இதனால் மனுதாரரின் மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் ஆலங்குளம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அவர்கள் ஆஜர்படுத்தப்படுவது தொடர்பாக மனுதாரருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 3 பேரின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் பதிவு செய்ய வேண்டும். அந்த குழந்தைகளுடன் மாஜிஸ்திரேட் பேசி, அவர்களிடம் உரிய தகவல்களை பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுத்து ஐகோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.