திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருமாலும், பிரம்மாவும் சிவபெருமானின் அடி முடி காணாமல் திகைத்தபோது அவர் லிங்கோத்பவ மூர்த்தியாக அருள்பாலித்த திருநாளே மகா சிவராத்திரி என்று புராண கதைகள் கூறுகின்றன. இதனை உணர்த்தும் வகையில் இக்கோவிலில் சாமி கருவறைக்கு பின்புறம் லிங்கோத்பவ மூர்த்தியின் உருவம் அமைந்துள்ளது.
இந்த ஆண்டிற்கான மகாசிவராத்திரி விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவிலில் நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது. மாலைக்கு பின் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குறிப்பாக வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை 4 கால பூஜைகளும் நடைபெற்றது. முதல் கால பூஜையை பிரம்மாவும், 2-ம் கால பூஜையை திருமாலும், 3-ம் கால பூஜையை உமையாளும், 4-ம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் செய்ததாக ஐதீகம் உள்ளது. கோவிலில் பக்தர்கள் எந்தவித சிரமமுமன்றி விரைந்து தரிசனம் செய்ய கட்டணம் மற்றும் கட்டணமில்லா தரிசன வழியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் கிரிவலம் சென்ற கூட்டம் குறைந்து காணப்பட்டது. மாலையில் கிரிவலம் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. விடிய, விடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.