திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் கொழுமத்தில், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையம் செயல்படாமல் பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு வேறு சுகாதார நிலையத்துக்கு மக்கள் சென்றனர்.
கொழுமம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்படாதது குறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக இந்த சுகாதார நிலையத்துக்கு செவிலியர் ஒருவரை சுகாதாரத்துறை பணியில் அமர்த்தியுள்ளது. இதையடுத்து சுகாதார நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம், மக்களுக்கு அடிப்படை மருத்துவ சேவைகள் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
பல மாதங்களாக சிகிச்சை வசதியின்றி அவதிப்பட்டு வந்த மக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. இங்கு, மாதாந்திர பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல், கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை, முதலுதவி உள்ளிட்ட சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சிரமம் குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு விரைவாக நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்துக்கும், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்திக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.