தமிழக செய்திகள்

மகாமக விழாவையொட்டி கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம் இன்று நடந்தது.

கும்பகோணம்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமகம் குளத்தின் வடகரையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் விழாவில் தொடர்புடைய கோவில்களில் இதுவும் ஒன்று. நவகன்னிகள் தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடக்கும். மாசிமகம் 9-ம் நாள் விழாவில் மகாமகம் குளத்தின் கரையில் தேரோட்டம் நடப்பது வழக்கம்.

ஆனால் இந்த கோவிலில் தேர் இல்லாததால் பல ஆண்டுகளாக கட்டு தேரோட்டம் நடந்தது. இந்நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு புதிய தேர் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கோவிலுக்கு அரசு மற்றும் உபயதாரர் நிதி என ரூ.43.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் கட்டும் பணிகள் தொடங்கி நடந்தது.

இந்த தேர் அலங்காரத்துக்கு முன்பு சுமார் 18 அடி உயரமும், 14 அடி அகலமும் கொண்டுள்ளது. மேலும் கோவில் சன்னதியில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களை வைத்து பூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவிலில் தனி சன்னதியில் உள்ள நவக்கன்னிகளின் வடிவமும் இடம் பெற்றுள்ளது.

திருச்சி பெல் நிறுவனத்தின் பணியாளர்கள் தயாரித்த இந்த தேர் சுமார் 150 டன் எடை கொண்டதாக உள்ளது. மாசிமகம் விழா மார்ச் 2-ந்தேதி நடக்க இருக்கிறது. இதையொட்டி மாா்ச் 1-ந்தேதி தேரோட்டம் நடத்தப்படும். தற்போது தேருக்கான அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதையொட்டி இன்று வெள்ளோட்டம் நடந்தது.

முன்னதாக தேருக்கு பல்வேறு திரவியங்கள் மற்றும் மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமானோர் திரண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தபடி, மகாமககுளக்கரையை சுற்றி வலம் வந்தனர்.

இந்தியாவில் வருமான வரி விதிப்பு முறை எப்போது அமலுக்கு வந்தது தெரியுமா?

Budget 2026 Live Updates... மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2026: தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் என்னென்ன..?

‘தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை’ - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி நிதி: பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?