திருவண்ணாமலை,
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க.செயலாளரும், திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளருமான எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட 18 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்று கல்லூரியில் அவர்கள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பணம் மற்றும் பொருட்கள் கிடைத்ததா? என்பது குறித்து எந்த தகவலையும் வருமானவரித் துறையினர் தெரிவிக்கவில்லை.
மாலை 5 மணியுடன் வருமான வரித்துறையினர் தங்கள் சோதனையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினர்.
இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து, எ.வ.வேலு நிருபர்களிடம் கூறுகையில், நான் பல சட்டமன்ற தேர்தல்களில் நின்று இருக்கிறேன். அப்போதெல்லாம் வராத வருமான வரித்துறை, இந்த முறை வருவதற்கு முழுக்காரணம், பா.ஜ.க. வேட்பாளர் திருவண்ணாமலையில் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற உள்நோக்கமே இதில் உள்ளது.
எனது தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் வருமான வரித்துறையினர் 2 தினங்களாக சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் ஒரு பைசா கூட கைப்பற்றப்படவில்லை என்றார்.