தமிழக செய்திகள்

ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை

பைக்கில் வந்த வாலிபர் திடீரென மாணவியை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றார்.

வேலூர்,

வேலூர் தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் வேலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 12 மணியளவில் ஜெயில் குடியிருப்பு அருகே ராம்சேட் நகர் பகுதியில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென மாணவியை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து மற்றும் வயிற்றில் குத்திவிட்டு தப்பிச்சென்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். விசாரணையில், மாணவியை கத்தியால் குத்தியவர் அரியூர் ஜீவரத்தினம் நகரை சேர்ந்த விக்னேஷ் (19 வயது) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர்.

அதற்கு முன்னதாக, மாணவியை கத்தியால் குத்திய விக்னேஷ் போலீஸ் விசாரணைக்கு பயந்து, வீட்டில் தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Also read:சேப்பாக்கத்தில் இந்தியா-ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டி: பயணிகளுக்கு சலுகை வழங்கிய மெட்ரோ

இதுகுறித்து போலீசார் கூறுகையில், விக்னேஷ் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து இருக்கலாம். அவருடன் பேச மறுக்கவே மாணவியை கொலை செய்ய துணிந்து, பின்னர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.