கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஓய்வுபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.15,000 வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மத்திய மாநில அரசுகளின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல், குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை கவனித்தல், கிராம சபை கூட்டங்களை கூட்டுதல், வரி வசூல் செய்தல் போன்ற இன்றியமையாப் பணிகளை ஊராட்சி செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவதாகவும், பதிவறை எழுத்தர் பணிக்கு இணையான 15,900-50,400 காலமுறை ஊதியத்தை ஊராட்சி செயலாளர்கள் பெற்று வருவதாகவும், அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப் படி போன்றவை வழங்கப்படுவதாகவும், அதே சமயத்தில் அரசுப் பணியாளர்களுக்கு இணையான பணிசார்ந்த உரிமைகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஊராட்சி செயலாளர்களுக்கு கீழ்நிலையில் அலுவலகப் பணியை மட்டுமே மேற்கொள்ளும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு இணையான பதவியில் உள்ள பதிவுறு எழுத்தர்கள் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், அலுவலகப் பணி மற்றும் களப்பணி ஆகிய இரண்டையும் மேற்கொள்ளும் ஊராட்சி செயலாளர்கள் புதிய உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படாததைக் கண்டித்தும், அவர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு 15,000 ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Also read:தமிழ்நாட்டில் விரைவில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலமாக போராடும் ஊராட்சி செயலாளர்களை அழைத்துப் பேசி அவர்களை தமிழ்நாடு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வழிவகை செய்யாமல் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டுள்ள தி.மு.க. அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை தமிழ்நாடு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கவும், ஓய்வுபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் 15,000 ரூபாய் வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.