கடலூர்,
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் தற்போது கடலூரில் இருந்து 180 கி.மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 190 கி.மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 250 கி.மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே மழை பெய்ய தொடங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதேபோல் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மேலும் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
அதேபோல் கடலூர் மீனவ கிராமங்களான தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்படுகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடலூர் உள்பட 7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிவர் புயல் காரணமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்புள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையம் மற்றும் நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.