சென்னை,
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், டெங்கு காய்ச்சல் தாக்கம் தலைதுக்கி வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையும், குளோபல் மருத்துவமனையும் இணைந்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதுவரை, நான்கு குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நிமோனியா, மூளை காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பதற்காக, 'நியூமோகாக்கல் கான்ஜிகேட்' என்ற தடுப்பூசி, மாநிலம் முழுதும் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 288 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட சிறார்கள், தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.
நர்சுகள், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களின் சிறப்பான பங்களிப்பால் தான், கொரோனா தொற்று குறைந்துள்ளது. வரும், 10ந்தேதி 5வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். அன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலக்கை அடைவோம் என கூறியுள்ளார்.