புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் அரசுமுறை பயணமாக இன்று காலை 10.35 மணியளவில் சென்னை வருகிறார். அவர், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 7.50 மணியளவில் சென்னை புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்துக்கு காலை 10.35 மணிக்கு பிரதமர் மோடி வந்து சேருகிறார். அங்கிருந்து காலை 10.40 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறார்.
பின்னர் அவர் அங்கிருந்து காலை 11.05 மணியளவில் கார் மூலம் புறப்பட்டு சாலைமார்க்கமாக தீவுத்திடல், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்டிரல், ரிப்பன் மாளிகை வழியாக சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு காலை 11.15 மணிக்கு வருகிறார். பிரதமர் வரும் வழியில் அவருக்கு 5 இடங்களில் பா.ஜ.க., அ.தி.மு.க. சார்பில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.