சென்னை,
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய் என்ற ஜெகதீஷ் (36 வயது). துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் ஜெகதீசுக்கு அறிமுகமானார். இருவரும் பேசி பழகி வந்தனர்.
மாணவியை காதலிப்பதாக ஜெகதீஷ் கூறியுள்ளார். அதற்கு மாணவி 'உங்களை நேரில் பார்த்தால்தான் காதலை ஏற்றுக்கொள்வேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்தனர். அப்போது ஜெகதீஷ் துறைமுகத்தில் கூலி வேலை செய்வதை அறிந்த மாணவி அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் ஜெகதீஷ் தொடர்ந்து மாணவியிடம் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பகலில் ஜெகதீஷ் மாணவி படிக்கும் பெண்கள் கல்லூரிக்குள் நுழைந்து, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. அப்போது கல்லூரி காவலாளி வெளியே போகும்படி ஜெகதீசை கண்டித்துள்ளார். காவலாளியிடமும் ஜெகதீஷ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மெரினா போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர்.