சென்னை,
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா திடீரென அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அதனை அதிமுகவுடன் இணைப்பதாக கூறினார். இந்த நிலையில் தீபா, முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். பின்னர் அந்த பதிவை நீக்கினார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று தீபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
''என் உடல் நிலை காரணமாக நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். அரசியலுக்கு வந்ததே தவறு என பல முறை யோசித்து இருக்கிறேன். என் வீட்டு முன் நின்று கட்டாயப்படுத்தி அழைத்ததாலேயே நான் அரசியலுக்கு வந்தேன். இனி அரசியலுக்கு வரமாட்டேன். பெண்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் தரக்குறைவான விமர்சனங்கள் கூடாது'' என்றார்.