தமிழக செய்திகள்

செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சி அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சி அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஓமலூர்:

ஓமலூர் அருகே செல்லபிள்ளைகுட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் மல்லக்கவுண்டனூர் பகுதியில் உள்ளது. இந்த கட்டிடம் பழுதடைந்ததால் புதிய அலுவலக கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து கிராம சபை கூட்டம் நடத்தி ஜடைமாரியம்மன் கோவில் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே கட்டிடம் கட்ட அரசு நிலத்தை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பூஜை போடப்பட்டது.

இந்த நிலையில் மல்லக்கவுண்டனூர் பகுதியில் உள்ள அருந்ததியர் தெருவில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பணிகள் நடந்தது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் அங்கு சென்று பணியில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதம் நடத்தினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அருந்ததியர் தெருவில் நடைபெற்ற கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. 

SCROLL FOR NEXT