தமிழக செய்திகள்

தூய்மை பணியாளர்கள் விவகாரம்: ஜனநாயக உரிமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! ஆதவ் அர்ஜுனா எக்ஸ் பதிவு

தி.மு.க., கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி, தூய்மை பணியாளர்களை மாநகராட்சி நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டு உள்ளார்.

சென்னை,

கடும் மழையிலும், கடுமையான காலங்களிலும், இரவு, பகல் பாராமல், முறையான நேரமின்றி, சரியான விடுப்பின்றி, பெருந்தொற்று காலம் வரையிலும் தங்களை அர்ப்பணித்து பணி செய்து வருகிறார்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால், அவர்களுக்கு இந்த தி.மு.க. அரசு பதிலுக்கு செய்த கைமாறு - 'குறைவான ஊதியத்திற்கு தனியாரிடம் வேலைக்கு போ' என்று வஞ்சித்தது. கிட்டத்தட்ட, தங்கள் மொத்த வாழ்க்கை நிலையையும் பல தலைமுறை பின்னுக்கு தள்ள முயன்ற, அரசின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்ட களம் கண்டார்கள் தூய்மை பணியாளர்கள்.

ஜனநாயக அமைதி வழியில் போராடியவர்களை, பெண்கள், எளிய மக்கள் என்றும் பாராமல் இரவோடு இரவாக அடித்து துன்புறுத்தி, கைது செய்தது சர்வாதிகார தி.மு.க. அரசு. எந்த பொது இடங்களிலும் அவர்களை போராடவிடவில்லை. வீட்டிலேயே போராடினாலும் பலவந்தமாக தடுத்து நிறுத்தினார்கள்.

ஜனநாயக வழியில் போராடுவதற்கே நீதிமன்ற உத்தரவு வாங்கி, உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்கள்.

ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் நேரடி மற்றும் மறைமுக மிரட்டல்கள், ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல் என அனைத்தையும் கடந்து 184 நாட்கள் தங்கள் உரிமை போரை நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு கிடைத்த வெற்றியே, இன்று மீண்டும் அவர்கள் பழையபடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் தற்காலிக பணியாளர்களாக சேர்க்கப்பட்டுள்ள முடிவு. மேலும், கடந்த தேர்தலில் தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி (வாக்குறுதி எண் 285) அவர்களை மாநகராட்சி நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எளிய மக்களின் ஒன்றுபட்ட ஜனநாயக போராட்டத்திற்கு முன் எப்பேர்ப்பட்ட சர்வாதிகார ஆட்சியும் இணங்கிதான் போக வேண்டும் என்ற மக்கள் போராட்டத்தின் வரலாற்றை மீண்டும் ஒருமுறை பார்க்கிறோம். தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே தமிழக வெற்றிக்கழகமும், கழக தலைவரும் நமது முழு ஆதரவுடன் துணை நின்றோம். தொடர்ந்து, எங்கெல்லாம் ஒடுக்குமுறை நிகழ்கிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கான உரிமை களத்தில் நமது குரல் ஒலிக்கும்.

"முடியாது என்று சொல்வதை நிகழ்த்தி காட்டும் வரை முடியாது என்றுதான் தோன்றும்" என்ற நெல்சன் மண்டேலா கூற்றுக்கேற்ப, மக்கள் விரோதமாக முடிவெடுத்த தி.மு.க. அரசுக்கு, ஜனநாயக உரிமை பாடம் எடுத்த தூய்மை பணியாளர் தோழர்கள் அனைவருக்கும் எனது செவ்வணக்கம்!

பொருளாதார தொலை நோக்கு பார்வையில்லாத பட்ஜெட் - ப.சிதம்பரம் விமர்சனம்

சாமானிய மக்களை வறுமைக்குள் தள்ளும் பட்ஜெட் - பினராயி விஜயன் தாக்கு

ஜனவரியில் ரூ.1.93 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்

கள்ளக்காதலனின் மனைவி, குழந்தை எரித்துக்கொலை - பெண் வெறிச்செயல்

மத்திய பட்ஜெட்; கோவாவை மத்திய அரசு முற்றிலும் மறந்து விட்டது: கெஜ்ரிவால் தாக்கு