சென்னை,
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட என்று கூறி வீடியோ காட்சியை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறும் நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒளிப்பரப்புவதை நிறுத்த வேண்டும் என ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்து உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் புகாரின் அடிப்படையில், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவின் வீடியோ வெளியானது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் டிடிவி தினகரனுக்கு தெரியாமல் வெளியிடப்பட்டு உள்ளது என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். வீடியோ வெளியீடு அரசியலா? உணர்வா? என கேள்வி எழுந்து உள்ளது. இந்நிலையில் வெற்றிவேல் பேசுகையில், சசிகலாவிடம் வீடியோவை பிப்ரவரி மாதம் பெற்றேன், இதனை வெளியிடக்கூடாது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோவிற்கும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என கூறிஉள்ளார்.