மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. கைதானவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி முத்துக்குமரன் வாசித்தார். அப்போது தந்தை, மகன் இருவருக்கும் மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உடலில் இருந்துள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. போலீசாரால்தான் அந்த காயங்கள் ஏற்பட்டது ஊர்ஜிதமாகியுள்ளது.
அடித்து பழக அப்பா, மகன் கிடைத்துள்ளனர் என போலீசார் பேசியுள்ளனர். இரவு முழுவதும் 10 நிமிடம் இடைவெளி விட்டு தாக்கியுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கு கொலை தான் என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 காவலர்களும் குற்றவாளிகள் என்றும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வருகிற 30-ந்தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.