தமிழக செய்திகள்

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோயில் அருகே உள்ள கூகூர் நல்லாடை அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு மாலை நேரத்தில் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்து வந்தது. பள்ளியில் படித்து வரும் மாணவிகளை சமூக அறிவியல் ஆசிரியர் கிள்ளுவதாகவும், பாலியல் ரீதியாக தொடுவதாகவும் புகார் எழுந்தது.

இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் பெற்றோர் இதுகுறித்து திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார், பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரும், கும்பகோணம் மகாவீர் நகர் பகுதியை சேர்ந்தவருமான ராஜ மனோகர் (56 வயது) என்பவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.