சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தர்மபுரி மாநகரில் ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையம் 3.97 ஏக்கரில் 1980-ம் ஆண்டிலும் நகர பேருந்து நிலையம் 1996-ம் ஆண்டிலும் கட்டப்பட்டது. இந்த இரண்டு பேருந்து நிலையத்தின் மொத்த பரப்பளவு 34,720 சதுர மீட்டர் (8.57 ஏக்கர்கள்) ஆகும். மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் வரும் மக்கள் இப்பேருந்து நிலையங்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு பொதுமருத்துவமனை, வன அலுவலகம், ஆவின் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மின்சார அலுவலகம், வேளாண்மை அலுவலகம், பொதுப்பணித்துறை, வணிக வரித் துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, மாவட்ட மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட தீயணைப்பு நிலையம், சிவில் சப்ளைஸ் துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவப் பணிகள் துறை, சுற்றுலா மாளிகை மற்றும் இலக்கியம்பட்டி பஞ்சாயத்து ஆகிய இடங்களை எளிதில் அடையலாம்.
மேலும் இப்பகுதிகளின் அருகில் மக்கள் அடர்த்தியாக வசிக்கின்றனர். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை தேவைக்காக எளிதில் அணுகும் வகையில் இப்பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் தமிழ்நாடு முதல்வரால் 05.02.2026 அன்று திறக்கப்பட்டு, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அது சமயம், அனைத்து பேருந்துகளும் நேரடியாக தனியார் பேருந்து நிலையத்திற்கே செல்வதால் பொதுமக்கள், சிறுகுறு வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த பிரச்சனை தொடர்பாக மக்கள் மாவட்ட ஆட்சியர் முதல் அனைத்து அரசு அதிகாரிகளிடமும் பலமுறை புகார் மனு அளித்துவிட்டனர்.
தற்போது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளானதால் வர்த்தகம் முடக்கம் ஏற்பட்டு ஊடகம் வாயிலாக எதிர்ப்பு எழுந்த பிறகு, தேர்தல் கண்துடைப்பாக சிறிய மாற்றம் செய்து கடந்த 09.02.2026 முதல் தருமபுரி நகர பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூர், திருவண்ணாமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, ஊத்தங்கரை, அரூர் பேருந்துகள் இயங்குமாறு செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக ஏற்பாடு போதுமானதல்ல, இதனால் மக்களின் சிக்கல் நிரந்தரமாக தீரப்போவதுமில்லை.
இந்த பேருந்துகள் மாற்றத்தால் வியாபாரிகளுக்கும் பெரிய வருவாய் இழப்பும், நகராட்சிக்கு ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகிறது என்பதையும் தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, தமிழ்நாடு அரசு தர்மபுரி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.