திருவள்ளூர்,
திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் கடந்த 28ந்தேதி மாநில கல்லூரி மாணவன் குமார், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மற்றொரு கல்லூரி மாணவர்கள் 8 பேர், குமாரை ராகிங் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதனையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவன் மனோஜ் (வயது 18) என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மற்ற மாணவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு மாணவன் திருநின்றவூர் அடுத்த குருவாயல் கிராம பகுதியை சேர்ந்த ஹரிஷ் (வயது 19) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இதன்பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, தலைமறைவாக உள்ள 6 மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.