அகில இந்திய காந்திய இயக்க தலைவர் விவேகானந்தன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பூரண மதுவிலக்கு
1971-ம் ஆண்டுக்கு பிறகு மதுவால் மக்கள் எல்லையில்லாத துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். மதுக்கடைகளை பூட்ட வேண்டி மக்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தாலும் இதுவரை எந்த பலனும் இல்லை. அரசியல் கட்சியினர் படிப்படியாக மது கடைகளை அகற்றி பூரண மதுவிலக்கை கொண்டு வருவதாக வாக்குறுதி கொடுத்தும் இதுவரை எந்த பலனும் இல்லை.
எனவே வருகிற சட்டமன்றத்தேர்தலில் மதுவிலக்குக்கு முதல் கையெழுத்திடுவோம் என்று வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே காந்தியவாதிகள் ஆதரவளிப்பார்கள். இதுகுறித்து நாங்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். வருகிற 27-ந் தேதி பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி முன்பு பூரண மது விலக்கு விழிப்புணர்வு கூட்டம் மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இதில் பெண்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என்று அனைவரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.
மதுவிலக்கை அமல்படுத்த அரசு ஒரு சதவீத வரி விதித்தால் மட்டும் போதும். நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தலாம். பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
லட்சுமி காந்தன் பாரதி
சுதந்திர போராட்ட தியாகி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி கூறுகையில், காந்திய கொள்கையை நாட்டில் அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே இந்த தேர்தலில் பூரண மதுவிலக்குக்கு முதல் கையெழுத்திடும் அரசியல் கட்சிக்கு காந்தியவாதிகள் ஆதரவளிப்பார்கள் என்றார். அப்போது ஓய்வு பெற்ற தாசில்தார் முத்துசாமி, திருமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.