சென்னை,
சென்னை வடபழனியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திருப்பூர் ரங்கநாதசுவாமி கோவிலுக்குச் சொந்தமான இடம், ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்குச் சொந்தமான இடம், திருப்போரூர் அருள்மிகு முருகன் கோவிலுக்குச் சொந்தமான இடம், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான இடம் என தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் ரூ.500 கோடி மதிப்பிலான 79 ஏக்கர் கோவில் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த கால அரசானது எந்த வித செயல்பாடுகளும் இல்லாமல் இருந்த அரசு என்பதற்கு இந்து சமய அறநிலையத்துறையே ஒரு சான்று ஆகும். கோவில் நிலங்களை மீட்கும் பணி தொடரும். கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.