சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக போலீசாரை பாராட்டி போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
ஜனநாயகத்தின் மிகச்சிறந்த நடைமுறையான சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் அமைதியாகவும், வெற்றிக்கரமாகவும் மற்றும் நல்ல முறையிலும் நடைபெற்றுள்ளது. இதற்கு நீங்களும் (அதிகாரிகள்), உங்கள் கீழ் பணிபுரிந்த போலீசாரும் அளித்த கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் புகழ்பெற்ற நமது காவல்துறையின் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் கூடிய பணி தேவையான ஒன்றாக உள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது நமது தலையாய கடமையாகும். மீண்டும் புத்துர்ணர்ச்சியுடனும், அர்ப்பணிப்புடனும் இந்த பெருந்தொற்றின் பிடியில் இருந்து மாநிலத்தை மீட்க உங்கள் கூட்டு முயற்சியை வெளிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்புடன் வைத்துக்கொண்டு கடமையை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.