சென்னை,
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் 2026&2027-க்கான பட்ஜெட் தொலைநோக்கு சிந்தனையோடு படைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. பட்ஜெட்டில் தொழில்முனைவோர், உற்பத்தியாளர்கள், வணிகர்களுக்கான சலுகைகள் அறிவித்திருக்கவேண்டும் என்பது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுவான கருத்தாகும். அரசு ஊழியர்களின் ஊதிய ஒதுக்கீடு மற்றும் ஓய்வூதிய ஒதுக்கீடு, தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் வட்டிக்கான ஒதுக்கீடு, மானிய நிதி ஒதுக்கீடு போன்றவற்றை உற்றுநோக்குகின்ற போது, மாநில அரசின் நிதிச்சுமை மிகப்பெரியது என்பதே செய்தியாக இருக்கின்றது.
தமிழக அரசு நிதிப்பற்றாக்குறைக்கான காரணங்களை ஆராய்ந்து, நிதி வருவாய் ஆதாரத்திற்கான வழிமுறைகளை தெறிவு செய்யும் பட்சத்தில் தமிழக வணிகர்களும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் அரசுக்கு துணை நிற்கும் என்பதை பேரமைப்பு இச்சமயத்தில் உறுதியாக தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றது. வணிகர்கள், அரசின் வரி வருவாய்க்கான ஆதாரம் என்பதை நினைவூட்டி, தமிழக அரசு மீண்டும் வணிகர்களின் முக்கிய கோரிக்கைகளான தொழில்வரி, சொத்துவரி, மின்கட்டண உயர்வு போன்றவற்றை மறு பரிசீலனை செய்து வணிகர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பேரமைப்பு வேண்டுகிறது.
தொலைநோக்கு சிந்தனையோடு நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துறை சார்ந்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாக பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.