சென்னை,
இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி-வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவத்தை டி.என்.பி.எஸ்.சி. கூற மறுப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், அந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு? பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில், அந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு?
பொது போட்டி பிரிவினருக்கான 31 சதவீத இடஒதுக்கீட்டில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைத்த பிரதிநிதித்துவம் எவ்வளவு? ஆனால் இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) பதில் சொல்லமாட்டோம் என்கிறது.
சமூகநீதியை நிலைநிறுத்துவதற்கு மிகவும் அவசியமான இந்த விவரங்களை சொல்ல டி.என்.பி.எஸ்.சி. மறுப்பது ஏன்? எதற்காக? இதற்கான விடை தெரிந்தவர்கள் பதில் கூறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.