ராஜாக்கமங்கலம்,
வெள்ளிச்சந்தை அருகே சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கலைக்குமார் (வயது 53), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அரசர்விளை பகுதியில் உள்ள சிந்துகுமார் (30) என்பவரின் டீக்கடைக்கு டீ குடிக்க சென்றார். டீ குடித்து கொண்டிருந்த போது கடையில் இருந்த சிந்துகுமாரின் செல்போன் திடீரென மாயமானது. அதை கலைக்குமார் திருடியதாக கருதி அவரிடம் கேட்டார்.
அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிந்துகுமார், கலைக்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில்கீழே விழுந்த கலைக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து காயத்துடன் வீட்டிற்கு சென்ற கலைக்குமார் தனது சகோதரன் அப்பாத்துரயிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். அதன்பிறகு சாப்பிட்டுவிட்டு தூங்கினார். இந்தநிலையில், நேற்று காலை கலைக்குமார் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அப்பாத்துரை வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வியாபாரி சிந்துகுமாரை கைது செய்தனர்.
டீக்கடையில் செல்போன் திருடியதாக கட்டிட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.