சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் மலேரியா நோய் தடுப்புப்பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த வினோத்குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த மார்ச் மாதம் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீசை மேல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் ஒட்டினேன். பின்னர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் அந்த நோட்டீசை அகற்றினேன். இதுதொடர்பாக மாநகராட்சி மண்டல அலுவலர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் மறுநாள் அலுவலகம் சென்றபோது, என்னை 15 நாட்களுக்கு பணி நீக்கம் செய்துள்ளதாக சுகாதார ஆய்வாளர் கூறினார். ஆனால் அதற்கான எந்த உத்தரவையும் வழங்கவில்லை. இதுகுறித்து மே 8-ந் தேதி, மாநகராட்சி இணை ஆணையாளரிடம் முறையிட்டேன். அப்போது அவர், மார்ச் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், வழக்கம்போல் பணிக்குச் செல்லலாம் என்றும் கூறினார். அதன்படி, மே 9-ந் தேதி பணிக்கு சென்றேன். அப்போது வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கவில்லை. எனவே, என்னை பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன், இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.