புதுடெல்லி,
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஆண்டில் இருந்து முடிவுக்கு வராமல் நீடித்து வந்த வர்த்தக ஒப்பந்தம் நேற்று இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.
இதற்கு இந்திய தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துவதற்கு பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்து உள்ளார் என்றும் ரஷியாவுக்கு பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அறிவித்துள்ள டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலிமையாக உள்ளது என்றும் கூறினார்.
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிப்பு தொடர்ச்சியாக, தொழிலதிபர்கள், சந்தை நிபுணர்கள், பொருளாதார வல்லுநர்கள் அதனை வரவேற்று உள்ளனர். இது வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி என குறிப்பிட்டு உள்ளனர். இந்தியா மற்றும் அமெரிக்காவின் தலைவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இதனால், இரு நாடுகளுக்கு இடையே, இருதரப்பு பொருளாதார உறவுகள் ஊக்கம் பெறும் என்றும் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை வலுப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர். இதனை ஏற்படுத்தி தந்த தலைவர்களுக்கும், குழுவினருக்கும் பாராட்டுகள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.