டெல்லி,
நாடாளுமன்றத்தில் கடந்த 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று முதல் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், சீன ஆக்கிரமிப்பு குறித்து ராகுல் காந்தியின் பேச்சால் நேற்று நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மக்களவை இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு சாதகமாக இருப்பதாக கூறி நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் , மக்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதே விவகாரத்தில் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.