புதுடெல்லி,
மலேசியாவில் இருந்து சுமார் 55 ஆயிரம் டன் மணலை ராமியா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ளது. இதனை பிற மாநிலங்களுக்கு எடுத்துச்செல்ல தமிழக அரசு தடை விதித்தது. எனவே தமிழக அரசே அதை கொள்முதல் செய்ய கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசு மணலை விலைகொடுத்து வாங்க ஒப்புதல் அளித்ததால், முழு தொகையையும் ஒரு வாரத்துக்குள் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா, அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆஜராகி இருந்தார்.
மலேசிய மணல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் ரூ.10 கோடியே 56 லட்சத்துக்கான வரைவோலை நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள இறக்குமதி மணலை விற்பனைக்காக வெளியே எடுத்துச்செல்ல தமிழக அரசுக்கு தூத்துக்குடி துறைமுக நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.