வாஷிங்டன்,
லிபியா நாட்டில் மனித உரிமை மீறல்கள், சிறை பிடித்தல், பாலியல் துன்புறுத்தல், மனித கடத்தல் மற்றும் மோசடி உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர் என ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனால், அந்நாட்டில் இருந்து மக்கள் தப்பி ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி ஆபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், படகு ஒன்றில் பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பேர் புறப்பட்டு ஐரோப்பிய நாட்டிற்கு அகதிகளாக பயணம் செய்துள்ளனர். அவர்கள் சென்ற படகு லிபிய நாட்டின் கும்ஸ் கடற்கரை பகுதியில் திடீரென கவிழ்ந்தது.
இதில், 74 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் 47 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 31 பேரின் உடல்களையும் அவர்கள் மீட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் தொடக்கத்தில் இருந்து இதுவரை 780 பேர் இத்தாலி நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். 1,900 பேர் வழியில் மறிக்கப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டில், ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி செல்ல முயன்ற அகதிகளில் 900 பேர் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி பலியாகி உள்ளனர். மீட்பு பணியில் ஏற்படும் தொய்வினால் அவர்கள் உயிரிழந்து உள்ளனர்.