உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவ சோதனை சாவடியில் தலீபான்கள் தாக்குதல் 9 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் மறுபடியும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களையும், போலீசாரையும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த 19-ந் தேதி காந்தஹார் மாகாணத்தில் ராணுவ வளாகம் ஒன்றின்மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்ததக்கது.

இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பாரா மாகாணத்தில், புஷ்ட் ரோடு மாவட்டத்தில் உள்ள ராணுவ சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவில் புகுந்து கடுமையான தாக்குதல்களை நடத்தினார்கள். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் பதிலடி தந்தனர்.

இரு தரப்பிலும் கடுமையான துப்பாக்கி சண்டை பல மணி நேரம் நீடித்தது.

இதன் முடிவில் ராணுவ வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை பாரா மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் முகமது நாசர் மெஹ்ரி உறுதி செய்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ பகுதியில் ராணுவ விமானங்கள் குண்டுவீச்சில் ஈடுபட்டதாகவும், அதில் தலீபான் பயங்கரவாதிகள் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.