Image Courtacy : AFP 
உலக செய்திகள்

சிஐஏ டிரோன் தாக்குதலில் அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்

சிஐஏ டிரோன் தாக்குதலில் அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராகவும், மாஸ்டர் மைன்ட்டாகவும் செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றனர். இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டநிலையில் தற்போது மீண்டும் தலை தூக்கி உள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் நிர்வாகம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தும் வரை தகவலை வெளியிட தாமதப்படுத்தி வருகிறது.

அல்-ஜவாஹ்ரி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துவிட்டனர், ஆனால் ஒரு அறிக்கையில் "அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஒரு குறிப்பிடத்தக்க அல்கொய்தா இலக்குக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை நடத்தியது. இந்த நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பு எதுவும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரவு 7:30 மணிக்கு தாக்குதல் நடவடிக்கை பற்றிய கூடுதல் விவரங்களை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.