உலக செய்திகள்

அமெரிக்காவில் பள்ளிகளில் முக கவசம் அணிய வலியுறுத்தல்

அமெரிக்காவில் பள்ளிகளில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில், தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிதக் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் பைசர் தடுப்பூசியை 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு செலுத்த அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தாலும், பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT