சமூக வலைத்தளங்களில் அதிகம் பேர் பயன்படுத்தும் ஒன்றாக இன்ஸ்டாகிராம் உள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் புகைப்படம் மட்டும் பதிவு செய்யும் செயலியாக இருந்த இன்ஸ்டாகிராம், நாளடைவில் வீடியோ பதிவேற்ற வசதியையும் கொண்டு வந்தது. டிக் டாக் தடைக்கு பிறகு இன்ஸ்டாவில் அறிமுகமான ரீல்ஸ் வசதி பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிய அம்சங்களை இன்ஸ்டா அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிறகும் ஸ்டோரிகளை திருத்தும் புதிய அம்சம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
தற்போது,இன்ஸ்டா ஸ்டோரியில் எழுத்துப் பிழை, தவறான டேக் அல்லது ஸ்டிக்கர் இருந்தால் அதை நீக்கி மீண்டும் பதிவேற்ற வேண்டும். ஆனால் புதிய ‘எடிட் ஸ்டோரி’ (Edit Story) அம்சத்தின் மூலம் பதிவிட்ட பிறகும் நேரடியாக திருத்தம் செய்ய முடியும். இந்த அம்சம் தற்போது சில ஐபோன் பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வாட்ஸ்அப்-பிலும் இன்ஸ்டாகிராமின் ‘நெருங்கிய நண்பர்கள்’ அம்சத்தைப் போன்ற புதிய தனியுரிமை வசதி வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் என தனித்தனி பட்டியலை உருவாக்கி, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் ஸ்டேட்டஸை பகிர முடியும். தற்போது இந்த அம்சமும் பீட்டா பயனர்களிடம் சோதனையில் உள்ளது.