உலக செய்திகள்

ஈராக் ராணுவ தளம் மீது ராக்கெட் வீச்சு: அமெரிக்க ஒப்பந்தக்காரர் பலி

ஈராக் ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் வீச்சு தாக்குதலில், அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவர் பலியானார்.

வாஷிங்டன்,

ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு தங்கி இருந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்தநிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதல் அமெரிக்க படைகள் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன.

இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற துணை ராணுவ குழுக்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. மேலும், அமெரிக்க நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈராக் நாட்டுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியது.

இதற்கு மத்தியில், ஈராக்கின் வடபகுதியில் உள்ள கிர்குக் நகரில் அமெரிக்க படைகள் தங்கி இருந்த ராணுவ தளம் மீது ராக்கெட் வீச்சு நடந்துள்ளது. நேற்று முன்தினம் இங்கு 30 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல்களில் அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவர் பலியானார். அமெரிக்க படை வீரர்கள் பலரும் படுகாயங்களுடன் தப்பினர்.

இந்த தகவல்களை ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிற அமெரிக்க கூட்டுப்படைகள் வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பாக ஈராக் படைகள் விசாரணை நடத்துகின்றன.

SCROLL FOR NEXT