மாஸ்கோ,
ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.
தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான மர்ம விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உளவுத்துறை அதிகாரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றியது தொடர்பாக இங்கிலாந்து அதிரடி நடவடிக்கையாக ரஷியாவின் 23 தூதர்களை உளவாளிகள் என கூறி வெளியேற்றியது. ரஷியாவும் பதில் நடவடிக்கையாக இங்கிலாந்து தூதர்களை வெளியேற்றியது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவில் உள்ள தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை இங்கிலாந்து குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் 50 மேற்பட்ட தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக, நேற்று பிரிட்டனில் எவ்வளவு எண்ணிக்கையில் ரஷ்ய தூதர் உள்ளார்களோ? அதே எண்ணிக்கையிலே ரஷ்யாவிலும் இங்கிலாந்து தூதரக அலுவலர்கள் இருக்க வேண்டும் என்றும் தூதரக அலுவலர்களை குறைக்க ஒருமாதம் அவகாசம் அளிக்கப்படுவதாகவும் ரஷ்யா தெரிவித்து இருந்தது.