உலக செய்திகள்

உலக வெப்பமயமாதலை தடுக்க நியூசிலாந்தின் வழியை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் - ஜெசிந்தா ஆர்டன் வலியுறுத்தல்

கார்பன் உமிழ்வை குறைக்க நியூசிலாந்தின் வழியை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் வலியுறுத்தியுள்ளார்.

வாஷிங்டன்,

சர்வதேச அளவிலான உலக பருவநிலை உச்சி மாநாடு காணொலி காட்சி மூலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததன் பேரில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பருவநிலை மாறுபாடு காரணமாக உலக நாடுகள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து அனைவரும் பேசினர். இந்த உச்சி மாநாட்டில் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு கார்பன் உமிழ்வை குறைக்க நியூசிலாந்தின் வழியை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மேலும் கார்பனை விலை நிர்ணயம் செய்யவும், காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடுகளை கட்டாயமாக்கவும், புதைபடிவ எரிபொருள் மானியங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் உலக நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜெசிந்தா ஆர்டெர்ன் வலியுறுத்தியுள்ளார்.