உலக செய்திகள்

இலங்கையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை ஐக்கிய தேசிய கட்சி தகவல்

இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக சமீபத்தில் பதவியேற்றார். இதன் மூலம் அங்கு நிலவி வந்த அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கொழும்பு,

தற்போது புதிய மந்திரி சபை பதவியேற்றுள்ள நிலையில், இலங்கையில் முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலை ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி மறுத்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜித் பெரேரா கூறுகையில், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன் தேர்தல் நடத்தக்கூடாது என்ற எங்களின் விருப்பத்தை நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு முன் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படாது என்று தெரிவித்தார்.

இதைப்போல, நாடாளுமன்ற தேர்தல் நடத்த வேண்டிய 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என உயர்மட்டக்குழு கூட்டம் ஒன்றில் முடிவு எடுத்து இருப்பதாக மந்திரி மனோ கணேசனும் கூறினார்.