திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதேவேளை, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இடம் இடம்பெற்றுள்ள போதும் கேரளாவில் இரு கட்சியினரும் எதிர்த்து போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், தேர்தல் தொடர்பாக பரப்பப்படும் போலி, தவறான செய்திகளை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாக்குப்பதிவு எந்திரம் குறித்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக மலப்புரம், கொல்லம், திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.